Sunday, November 13, 2011

photos



Photos kolli hills trip



சென்னை – கொல்லிமலை ஒரு பயணம்

நீண்ட நாளாக வெளியூர் சென்று வர வேண்டும் என நினைத்துக்கொண்டு இருந்தேன், நண்பர் ஒருவர் ஹார்சிலி ஹில்ஸ் போய் வருவோமா என கேட்டார். அன்று பார்த்து அண்ணன் வீட்டில் ஒரு முக்கிய விசேஷம் இருக்க போக முடியாமல் போயிற்று.

நண்பர் சென்று விட்டு வந்து இடம் பார்க்க பிரமாதமாக இருக்கிறது என்று சொன்னார். அதனால் என்ன அடுத்த முறை கட்டாயம் வருகிறேன் என்று சொல்லி வைத்து இருந்தேன், நண்பரும் மறக்காமல் இந்த முறை கொல்லி மலை போய் பார்த்து விட்டு வரலாமா என்று கேட்டார், ஏற்கனவே கொல்லி மலை போகும் பாதை பற்றி சொல்லி இருக்கிறார், அது நாமக்கல்லிருந்து சுமார் 73 கொண்டை ஊசி வளைவுகள் கடந்து போக வேண்டுமாம், கேட்கும் போதே ஒரு மாதிரி இருந்த்து, எதுக்கும் நம்ம கூகிளார் என்ன சொல்லறாருனு பாக்கலாமேனு தேடினா, கொல்லி மலை கொண்டை ஊசி வளைவுகள் லிம்கா சாதனை புத்தகத்தில் அதிக வளைவுகள் கொண்ட இடம்னு போட்டிருந்தது. சரி மேப்பில் பார்க்கலாம்னு பார்த்தா வெறும் டார்ட்டாய்ஸ் கொசுவத்தி சுருள் போல போட்டிருந்திச்சு. இது நிஜமாவே ஒரு திரில் பயணம் தான் போலனு நினைச்சிக்கிட்டேன்.

பயண நாள் அன்று பூந்தமல்லி, வேலூர் கிருஷ்ணகிரி சேலம் நாமக்கல் சேந்தமங்கலம் வழியாக கொல்லி மலை செல்ல காலை 6 மணிக்கு புறப்பட்டோம், ஆயுத பூசை முடிந்த அடுத்த நாள் நவம்பர் 6 தேதி சென்னை பெங்களூரூ சாலையில் காலை நேரத்திலேயே நல்ல போக்குவரத்து நெரிசல், வழக்கம் போல் ஸ்ரீபெரும்புதூர் அருகே பெரிய டிராஃபிக் ஜாம், எல்லா வண்டியும் அடுத்த லேனில் போக ஆரம்பித்தது நாங்கள் இடது பக்கம் நின்று கொண்டிருந்தோம், இன்னும் எவ்வளவு நேரம் ஆக போகுதோனு பார்த்து கொண்டிருக்கும் போது சிறிது நேரத்திலேயே வாகனம் எல்லாம் நகர தொடங்கி இருந்தது.

காலை 7.30 மணி அளவில் அறுசுவை ஹோட்டலை அடைந்தோம், ஹோட்டல் புதுப்பித்து உள்ளார்கள், சாப்பிட்டு முடித்து வந்து பார்த்தால் டயரில் ஆணி குத்தி இருந்தது, பிறகு டயரை கழற்றி மாட்டி விட்டு பயணத்தை தொடர்ந்தோம், ஆம்பூர் 8.30 மணிக்கு கடந்தோம், ஸ்டார் பிரியாணி வாங்கி போகலாம்னு பார்த்தா, பிரியாணி 8.30 மணிக்கு தயாராகவில்லை, இதோடு 4 முறை ஆம்பூரை கடந்து சென்றும் பிரியாணி சாப்பிட வாய்ப்பு கிடைக்கலை, அடுத்த முறை பிரியாணி சாப்பிடுவதற்காகவே ஆம்பூர் சென்று வர வேண்டும்.

கிருஷ்ணகிரி தாண்டி தருமபுரி கடக்கும் போது 11.15, தொப்பூர் சாலையில் ஒரு பெரிய ட்ரைலர் லாரி தெரு விளக்கு கம்பம் ஏற்றி வந்து நடு ரோட்டில் கவிழ்ந்து விழுந்து ஒரு பக்க சாலையை மறித்து கொண்டது வலது புற சாலையில் இரு வழி போக்குவரத்து ஏற்பாடு செய்து இருந்தார்கள், ஒரு வழியாக தோப்பூர் கடந்து சேலம் வந்து பெட்ரோல் போட்டோம்.

சேலம் நாமக்கல் புற வழி சாலையில் ஒரு ஹோட்டல் கூட இல்லை, அரசு பேருந்து எதுவும் உணவுக்கு நிற்காதோ அல்லது மோட்டல் வைத்து எல்லா பொருட்களையும் அதிக விலைக்கு விற்க யாரும் சொல்லி தரவில்லையோ?

பின்பு ராசிபுரம் வந்து ஒரு ஹோட்டலில் சாப்பிட்டோம், சாப்பாடு பற்றி என்ன சொல்ல,வேறு வழி இல்லாததால் சாப்பிட வேண்டியதாக போயிற்று இத்தனைக்கும் கோர்ட் எதிரில் உள்ள பெரிய ஹோட்டல் தான்.

சாப்பிட்ட பிறகு கொல்லி மலையில் ஏடிஎம் இருக்கோ இல்லையோ பணம் எடுக்கலாம் என்று ஆக்சிஸ் பாங்க் எங்கே இருக்குனு தேடி, ஒரு 1.50 கிலோமீட்டர் நடந்து போன பிறகு தான் ஆக்சிஸ் பாங்க் வந்தது வழியில் போகும் போது எல்லாரும் இதோ பக்கம் தான், பக்கம் தான்னு சொன்னாங்க அவங்க ஊரில் 1.50 கிலோமீட்டர் எல்லாம் பக்கம் தான் போல, ஒரு வழியா ஏடிஎம் போய் கார்டு போட போனா பணம் இல்லைன்னு போர்டு போட்டிருக்கான், திரும்பவும் வேறே பணம் உள்ள ஏடிஎம் எங்கே இருக்குனு கேட்டு HDFC ஏடிஎம் போய் பணம் எடுத்து விட்டு, ராசிபுரத்திலிருந்து கிளம்பினோம்.

கொல்லிமலையின் மலைப்பாதை துவங்கும் சேந்தமங்கலம் வந்து சேர்ந்த போது மாலை 3 மணி இங்கிருந்து மலைப்பாதை ஆரம்பம் முதலில் வரும் வளைவுகள் சிறிது தூரம் தள்ளி தள்ளி வந்தது இது சுமார் 15 வளைவுகள் வரை நீடித்தது அதன் பிறகு வரும் வளைவுகள் மிகவும் நெருங்கி இருந்தன. ஒரு வழியாக 73 வளைவுகளையும் கடந்து 4 மணிக்கு செம்மேடு என்னும் இடத்தில் தங்க அறைகள் ஏற்பாடு செய்து இருந்தோம் அங்கு போய் கேட்டால் இன்று ரூம் எதுவும் இல்லை என்று சொன்னான் பிறகு அங்கு உள்ள மற்ற தங்கும் விடுதியில் போய் கேட்டால் அதிலும் இடம் இல்லை, ஒரு வழியாக மிச்சமிருந்த ஒரே ஒரு விடுதியில் போய் பேசி இடம் பெற்றோம்.

கொஞ்ச நேரத்தில் கொல்லிமலையில் இருக்கும் ஒரே சுற்றுலா சிறப்பு அரப்பளிஸ்வரர் கோயில் அதற்கு இன்னும் 14கிமீ செல்ல வேண்டும் மீண்டும் மலைப்பாதையில் வளைந்து நெளிந்து கோயிலுக்கு போனோம். கோயில் நல்ல பெரிய கோயில் அந்த மலை உச்சியில் அந்த நாளிலேயே யார் இவ்வளவு பிரம்மாண்டமாக கட்டினார்களோ சிவனை நன்கு தரிசித்து விட்டு அருகிலேயே உள்ள சிற்றருவியையும் பார்த்து விட்டு விடுதி வந்து சேர 7மணி ஆகியது.

விடுதியிலேயே இரவு உணவுக்கும் சொல்லி இருந்தோம், ஆனால் 7 மணிக்கு திரும்பி வந்த பிறகு உணவு தயாரிக்கவில்லை, சமையல் ஆளுக்கு உடம்பு சரி இல்லை என்று கூறினார்கள், நல்ல இருட்டு குளிர் வேறு துவங்கிவிட்டது இந்த நிலையில் உணவுக்கு எங்கே போவது என்று யோசிக்கும் போது, விடுதிக்கு எதிரில் ஒரு சிறிய சாப்பாட்டு கடை தென்பட்ட்து, இந்த ராத்திரி வேளையில் எங்கு செல்வது கிடைப்பதை சாப்பிட்டு கொள்ளலாம் என்று அந்த கடையை நோக்கி போனோம்.இந்த சின்ன கடையில் என்ன இருக்க போகுதுனு போய் உட்கார்ந்தோம், தோசை, சப்பாத்தி, உள்ளது என்று சொன்னார்கள், சப்பாத்தியும் குருமாவும் சாப்பிட்டோம், நாங்க நினைச்சதை பொய்யாக்கணும்னு இரவு டிபன் பிரமாதமாக இருந்தது, எல்லோருக்கும் பிடித்து போய்விட்டது, காலை டிபனையும் அங்கேயே சாப்பிடுவது என முடிவு செய்து ஹோட்டலில் சொல்லிவிட்டு ரூமுக்கு வந்தோம் அலுப்பில் நல்ல தூக்கம்.

கொல்லி மலை போனால் அரப்பளிஸ்வரர் கோயிலுக்கு திரும்பும் இடத்தில் உள்ளது ரவி ஹோட்டல், தோற்றத்தை பார்த்து ஏமாற வேண்டாம் நல்ல சுவைக்கு ஒருமுறை சாப்பிட்டு பார்க்கவும்

அடுத்த நாள் காலை எழுந்து வெளியே எட்டி பார்த்தால் நல்ல குளிர், கொல்லி மலையில் எங்கு பார்த்தாலும் மிளகு கொடி படர்ந்து உள்ளது, எல்லா மரங்களிலும் மிளகு கொடியும் சேர்ந்தே வளர்கிறது, இன்று ஆகாச கங்கை என்னும் நீர்வீழ்ச்சி பார்க்க புறப்பட்டோம் திரும்பவும் அதே அரப்பளிஸ்வரர் கோயில் வழியில் சென்றோம், காலையில் போகும் போது தான் மலைப்பாதை வளைவுகள் இன்னும் தெளிவாக தெரிந்தது. எப்படியும் இதிலும் ஒரு 10 கொண்டை ஊசி வளைவுகளாவது இருக்கும் 14 கிமீ தூரமாயிற்றே.

ஆகாச கங்கைக்கு நுழைவு கட்டணம் உண்டு டிக்கட் கொடுக்கும் போதே ஆளை பார்த்துவிட்டு யார் யார் போகலாம் யாருக்கு சிரமமாக இருக்கும் என்று எச்சரிக்கை கொடுக்கிறார்கள், நமக்கு தான் யார் நல்லது சொன்னாலும் உடனே கேட்க பிடிக்காதே டிக்கட் வாங்கி அருவிக்கு போகும் பாதையை பார்த்தால் ஒரு நீண்ட படிக்கட்டு கொஞ்ச தூரம் போன உடனே மூச்சு வாங்க தொடங்கியது, மேலே ஏறி வருபவர்களை பார்த்தால் எல்லோரும் களைப்போடு மூச்சு வாங்கி வந்தார்கள், அவர்களிடம் இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னு கேட்டால் அது இருக்கும் 1 கிமீ தூரம், 1200 படிக்கட்டுகள் இதை கேட்டவுடனேயே வடிவேலு பாஷையில் இப்பவே கண்ணை கட்டுதேனு இன்னும் இறங்கணுமானு மனைவி அங்கேயே நின்றுவிட்டாள், பிறகு எங்கே போவது, நண்பரை மட்டும் போக சொல்லிவிட்டு நாங்கள் 380 படியிலிருந்து திரும்பி வர தொடங்கினோம், நாங்கள் நடந்து வருவதை பார்த்து மேலும் பலரும் எங்களை பார்த்துவிட்டு திரும்ப தொடங்கினர் ஒரு 10 பேரை அருவி பார்க்காமல் திருப்பி அனுப்பிய பெருமை எங்களுக்கே சேரும்.

அருவி பார்க்க போன நண்பர் 3 மணி நேரம் கழித்து திரும்பினார் அருவி எப்படி என்று கேட்டதுக்கு, சுமார் 120 அடி உயரத்திலிருந்து விழும் அருவியின் சாரல் அந்த இடத்தையே நனைக்கிறதாம், அருவியின் அருகே போகவே முடியாதாம் தள்ளி நின்றாலே நனைத்துவிடுமாம் பிரமாதமாக இருந்தது என்றார், கொல்லிமலை போகிறவர்கள் படிக்கட்டில் ஏறுவதற்கு பயப்படாமல் ஒறு முறை ஆகாச கங்கையை பார்த்துவிட்டு வரவும்.

மதிய உணவுக்கு மீண்டும் அதே ஹோட்டல் நல்ல சாப்பாடு, சாப்பாட்டுக்கு பின் நண்பர் வாசலூர்பட்டி என்னும் இடத்திற்கு படகு சவாரி போனார் என் மகனுக்கு படகு சவாரி பிடிக்காததால் போகவில்லை.

மூன்றாம் நாள் தாவரவியல் பூங்கா என்னும் ஒரு இட்த்துக்கு போனோம் பூங்கா நீர் ஊற்றுக்கள் என்று நன்றாக தான் இருந்தது, அந்த பூங்காவில் ஒரு வியூபாய்ண்ட் இருப்பதாகவும் அதை பார்க்க போகலாம் என்று புறப்பட்டோம் அது 1 கிமீ நடந்தே போகவேண்டும் சுமார் 200 மீட்டர் மண் பாதை ஒன்று இருந்தது போகப்போக அதுவும் மறைந்து காட்டு வழி பாதை போல் ஆனது ஒரு வழிகாட்டி போர்டும் கிடையாது முன்னால் ஆட்கள் நடந்து போன தடமும் இல்லை நல்ல புதர் அடர்ந்த வனம் இப்படி தான் போகணும்னு தெரியாமல் நடந்து போய் கொண்டே இருந்தோம் புதர்களை பார்க்கும் போது பயமாக இருந்தது, யாரிடமாவது வழி கேட்கலாம் என்றால் எங்களை தவிர யாரும் இல்லை இன்னும் எவ்வளவு தூரம் போகணும் சரியான பாதையில் தான் போகிறோமா என்றும் உறுதியாக தெரியவில்லை நடக்க துவங்கி சுமார் 45 நிமிஷம் ஆகியிருக்கும் கொண்டு வந்த தண்ணீரும் தீர்ந்து விட்ட நிலையில் வியு பாய்ண்ட் மட்டும் கண்ணுக்கு தெரியவில்லை, அது போக, வழியில் ஒரு இடத்தில் பாதை இரண்டாக பிரிந்தது எதில் தொடர வேண்டும் என குழப்பம் இன்னும் மேலே ஏற ஏற பெரும் வனமாக தான் தெரிந்தது வந்த வரை போதும் திரும்பிவிடலாம் என நினைத்த போது தான் சிறிது தொலைவில் வியூபாய்ண்ட் இருப்பது தெரிந்தது, வியுபாய்ண்ட் டவர் அது வேறு ஒரு 10மீ உயரத்தில் இருந்தது அதில் ஏறி கொல்லிமலையை பார்த்தோம் கீழே சமவெளி தெரிந்தது என்ன ஊரோ ஒரு தகவல் அறிவிப்பும் கிடையாது நமக்கு தெரிந்த ஊர் பேர் எல்லாம் சொல்லிக்கொள்ள வேண்டியது தான். பின்பு கீழ் இறங்கி வந்து மதிய சாப்பாட்டுக்கு ஹோட்டலுக்கு போனால் எல்லாம் தீர்ந்துவிட்டிருந்தது! வேறு வழி? அங்கிருந்து 2 கிமீ தூரம் உள்ள செம்மேடு என்னும் இடத்துக்கு சாப்பிட போனோம் ஹோட்டல் என்னவோ புதிது தான் ஆனால் உணவு தான் படு மோசம் ஏன் தான் வந்தோம் என்றாகிவிட்டது

சாப்பிட்ட பின் இன்னொரு வியூபாய்ண்ட் போனோம் இது ரொம்ப தூரம் நடக்க வேண்டாம் இதுவும் வாசலூர்பட்டி அருகில் தான் இருந்தது, வழக்கம் போல் கீழே சமவெளி தெரிந்தது என்ன ஊரோ ஒரு தகவல் அறிவிப்பும் கிடையாது நமக்கு தெரிந்த ஊர் சேலம் நாமக்கல் என்று எல்லாம் சொல்லிக்கொள்ள வேண்டியது தான்

மாலை மாசிலா அருவி என்று ஒரு அருவியை பார்க்க கிளம்பினோம் திரும்பவும் அதே அரப்பளிஸ்வரர் கோயில் வழி ஆனால் பாதி வழியிலேயே மாசிலா அருவி 6கிமீ என்று ஒரு அறிவிப்பு பலகை இருந்தது அந்த வழியில் திரும்பி போனால் போன கொஞ்ச தூரத்திலேயே ரோடு மோசமாக தொடங்கியது போகப்போக ஒரு வழி பாதை ஆனது இன்னும் போகப்போக வீடுகள் எல்லாம் மறைய தொடங்கியது வழி கேட்க கூட ஆளில்லை,ஒரு இடத்தில் பாதை இரண்டாக பிரிந்தது வலது பக்க சாலை சுமாரகவும் இருந்தது அதில் சிறிது தூரம் போனபிறகு தான் தெரிந்தது அது சரியான வழி இல்லை என்று திரும்பி வந்து இப்போது இடது பக்கம் உள்ள சாலையில் போனோம் 6 கிமீ தூரம் கடந்துவிட்டோம் ஆனால் அருவியின் அறிகுறியே இல்லை, நல்ல வேளை எதிரில் ஒரு பள்ளி வாகனம் வந்தது அவரிடம் வழி கேட்டு ஒரு 10 நிமிசத்தில் மாசிலா அருவியை அடைந்தோம் இங்கும் வண்டியை விட்டு இறங்கி சுமார் 500 மீட்டர் நடந்து அருவியை அடைய வேண்டும் அருவியில் நல்ல தண்ணீர் விழுந்து கொண்டு இருந்தது கொஞ்ச பேர் குளித்து கொண்டும் இருந்தனர் ஒரு மணி நேரம் இருந்து விட்டு தங்கும் இடத்துக்கு திரும்பினோம்.

நான்காம் நாள் கொல்லி மலை விட்டு கிளம்பினோம் 8 மணிக்கு கிளம்ப நினைத்து காலை டிபன் லேட் ஆனதால் 9.30 க்கு தான் மலை இறங்க தொடங்கினோம் 45 நிமிடத்தில் கீழ் இறங்கினோம் இந்த முறை பெரம்பலூர் வழியாக வர நினைத்தோம் கூகிள் மேப்பில் வழி எல்லாம் பார்த்து வந்து கொண்டிருந்தோம், சேந்தமங்கலம் தாண்டியவுடன் கொண்டாம்பட்டிமேடு என்னுமிடத்தில் இடது திரும்பினால் துறையூர் செல்லும் வழி வரும் ஆனால் செல்போன் சிக்னல் இல்லாததால் கூகிளார் மேப்பில் வழி காண்பிக்க மறுத்தார் ஒரு தகவல் அறிவிப்பு பலகையும் இல்லை எங்கே திரும்ப வேண்டும் என்று தெரியாததால் நேராக நாமக்கல் வரை வந்துவிட்டோம் பிறகு வழி விசாரித்து நாமக்கல் போலிஸ் ஸ்டேஷன் வழியாக போனால் துறையூர் ரோடு வரும் என்றார்கள் அங்கே போனால் ஒரு ரயில்வே மேம்பாலம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள் கார் லாரி செல்ல அனுமதி இல்லை வழியும் இல்லை எங்களை போலவே இன்னும் 2, 3 கார்களும் போக முடியாமல் திரும்பினோம், பிறகு மெயின்ரோடு வந்து இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்ப்பில் பெட்ரோல் போட்டுவிட்டு அந்த பெட்ரோல் பம்ப்புக்கு அருகிலேயே துறையூர் போகும் சாலை இருந்தது துறையூர் பவிளம் தாத்தையாங்கர்பேட்டை வழியாக பெரம்பலூர் வந்து சேர்ந்தோம்.

வழியில் பாலம் கட்டும் வேலை 4 இடங்களில் நடைபெறுகிறது அதற்கு போட்டிருக்கும் வேகத்தடையை கவனமாக கடக்கவேண்டும் ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென்று தோன்றும், பெரம்பலூர் கடந்து NH45 வந்தவுடன் நல்ல வேகம் விழுப்புரம் பொன்னுசாமி ஹோட்டலில் சாப்பிட நிறுத்தும்போது நேரம் மதியம் 1.45, அந்த நேரத்திலும் நல்ல கூட்டம் உட்கார இடமில்லாமல் சிறிது நேரம் காத்திருந்துவிட்டு இடம் கிடைத்ததும் சாப்பிட உட்கார்ந்தோம் சாப்பிட்டு விட்டு பில் பார்த்தால் சாப்பிடாத அயிட்டத்துக்கும் பில் வந்தது கூட்டத்தில் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்ற நினைப்பு போலும் சுட்டி காட்டியவுடன் கேப்டன் விஜயகாந்துக்கு பிடிக்காத வார்த்தையை சொல்லி பில்லை மாற்றி கொடுத்தான்.

மீண்டும் கிளம்பிய போது 3.45 ஆகிவிட்டிருந்தது அங்கிருந்து விக்கிரவாண்டி, திண்டிவனம் தாண்டி செங்கல்பட்டு டோல் ப்ளாசா வரும் போது நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள் ஏதோ ப்ளாசா பிரச்சனை போல எனக்கு முன்னால் போன இரண்டு கார்களும் டோல் கொடுக்கவில்லை நானும் கடக்கும் போது பணம் கேட்கவில்லை செங்கல்பட்டு தாண்டி நிறைய டிராஃபிக் ஒரு வழியாக தாம்பரம் தாண்டி பத்திரமாக வீடு வந்து சேரும் போது மாலை 4.45. மொத்த கிமீ போக 480 வருவதற்கு 398 கொல்லி மலையில் 70 கிமீ மொத்தம் 946 கிமீ petrol 73litres

போய் வர எல்லா டோல் ப்ளாசாவிலும் கட்டிய சுங்க தொகை
ஸ்ரீபெரும்புதூர் NH4 30
சென்னசமுத்தரம் NH4 25
பள்ளிகொண்டா NH46 60
வாணியம்பாடி NH46 60
தருமபுரி NH 7 73
ஓமலூர் NH 7 58
சோளக்காடு 25
அரப்பளிஸ்வரர் கோயில் 30 X 2
திருமாந்துறை NH 45 40
செங்குறிச்சி NH45 40
விக்கிரவாண்டி NH45 62
ஆத்தூர் NH45 20

TOTAL 553Rs